Wednesday, November 20, 2013

அல்லாஹ்வின் அழகிய திருநாமங்கள் (1)

1. யா-அல்லாஹ்
الله
2யா-ரஹ்மானு
(அளவற்ற அருளாளனே)
اَلرَّحْمنُ
3. யா-ரஹீமு
(நிகரற்ற அன்புடையோனே)
الرَّحِيْمُ
‏4யா-மலிக்கு (மன்னவனே)
اَلْمَلْكُ
5. யா-குத்தூஸு
(மிகவும் தூய்மையானவனே)
اَلْقُدُّوْسُ
6. யா-ஸலாமு
(சாந்தி அளிப்பவனே)
السلمُ
7. யா-முஃமினு
(அடைக்கலம் அளிப்பவனே)
اَلْمُؤْمِنُ
‏8யா -முஹைமினு(பாதுகாவலனே)
اَلْمُهَيْمِنُ
9. யா-அஸீஸு
(யாவற்றையும் மிகைத்தவனே)
اَلْعَزِيْزُ
10. யா-ஜப்பாரு (சமநிலையாக்குவோனே)
اَلْجَبَّارُ

 - புலவர் அஹ்மது பஷீர் அவர்களின்
புதுமலர்கள் இஸ்லாமியப் பாடநூல் 
3ஆம் வகுப்புப் புத்தகத்தில் இருந்து.


வெளியீடு 
சிங்கைப் பதிப்பகம்
சென்னை - 600087
தொலைபேசி  : 919884033731

Friday, November 8, 2013

கால் பதிக்கக் கற்றுக்கொள்

கால் பதிக்கக் கற்றுக்கொள்
வெற்றியெனும் கோட்டையின்மேல் விருப்பம் வைத்தல்
            வீணான செயலன்றே, உழைப்பில் லாமல்
வெற்றிமனக் கோட்டையினைக் கட்டிக் கட்டி
            வெட்டியிலே நேரத்தைப் போக்க லாமோ?
ற்றின்றி நூலறுந்த பட்டம் போலப்
            பதைபதைக்க வேண்டாமே! பண்பாய் எண்ணிக்
கற்றுவைத்த கல்வியெனும் தலத்தின் மீது
            காலபதிக்கக் கற்றுக்கொள்! கடுகிச் செல்க! 5

பின்னாலே கிடைக்கின்ற கனியைப் பற்றிப்
            பேராசை கொள்ளாதே! வித்தை ஊன்றி
நன்னீரைப் பாய்ச்சிவிடு! களையை நீக்கு!
            நாள்தோறும் கண்ணுக்குள் வைத்துப் போற்று
தன்னாலே மரமாகிக் கிளைக்கும், உன்றன்
            சலியாத உழைப்புக்குப் பரிசு நல்கும்
முன்னேறத் துடிக்கின்ற இளைஞ னுக்கு
            முயற்சியிலே நம்நிக்கை முதலில் வேண்டும்.   6

ண்ணமலர் மொட்டாக இருக்கும்போதே
            மணக்கின்ற குறிக்கோளை வைத்தி ருக்கும்
பண்ணமைத்து வாய்பாடும் முன்ன மேயே
            பாடுகின்ற உணர்ச்சியலை உள்ளி ருக்கும்
மண்ணுக்குள் எவ்வித்தை விதைக்கின் றாயோ
            வளர்செடிகள் அவ்வித்தின் அடையா ளந்தான்
எண்ணத்தில் கருக்கொண்ட ஆசை வித்தே
            எழில்மிகுந்த வாழ்வாகும் இயற்கை கண்டாய்!    7


நோக்கத்தைச் சீராக்கு முடிவை எண்ணி
            நோகாதே தொடங்குதற்கு முன்ன ரேயே!
வாக்கினிலே செம்மொழிகள் வைரப் பேச்சு;
            வரலாறு படைப்பதற்குத் துடிக்கும் கைகள்;
தூக்கிநிறுத் தளக்கின்ற நெடிய பார்வை;
தொடர்ந்துநடை போடுதற்குத் ‏‏துணிந்த கால்கள்;
ஆக்கத்தை எண்ணிட்டாய் இளைஞ னே!உன்
            ஆர்வத்தைத் தடைசெய்வான் இருக்கின் றானா? 8

புலவர் அஹ்மது பஷீர்
அவர்களின் இளைஞர்களுக்கான
முன்னேறு முன்னேறு மேலே மேலே
கவிதைத் நூலின் இரண்டாம் கவிதை

Saturday, August 10, 2013

இறைத்தூதர்கள் என்போர் யார்?

இறைவனுடைய செய்திகளை மக்களுக்கு அறிவித்தவர்கள் நபிமார்கள். 

அச்செய்திகள் வானவர் தலைவர் ஜிப்ரயீல் (அலை) அவர்கள் வழியாக, அல்லது நபிமார்களின் இதயத்தில் எழும் உதிப்பாக, அல்லது கனவின் மூலமாக அருளப் பெற்றன. மக்களை நல்வழி நடத்தவும், அல்வழிவிட்டு அகற்றவும் நபிமார்கள் தோன்றினர்.

இறை தூதர்களில் ரஸூல், நபி,  உலுல்அஸ்ம், ஃகாத்தம் என்னும் நான்கு தகுதிகள் - படிநிலைகள் உள்ளன.

இறைதூதர்கள் அனைவரும் நபிமார்கள் ஆவர். அவர்களின் எண்ணிக்கை 124000 என்று அறிவிக்கப் பெற்றுள்ளது. அவர்களில் வேதம் அல்லது வேதக் கட்டளைகள் கொடுக்கப்பட்டவர்கள் ரஸூல்மார்கள் எனப்பட்டனர். அவர்களுக்கெனத் தனி சட்டங்கள், வழிமுறைகள் இருந்தன. அவர்களின் எண்ணிக்கை 313. ரஸூல்களைப் பின்பற்றியவர்கள் நபியாவர். ஒரு ரஸூலின் பின் வேறு ஒரு ரஸூல் தோன்றினால்- அவருக்கெனப் புதிய சட்டங்கள் அல்லது வஷீ முறைகள் தோன்றிவிட்டால் முந்தைய ரஸூலின் ஷரீஅத் வழிமுறை முடிவுக்கு வந்துவிடும். புதிதாகத் தோன்றிய ரஸூலின் வழிமுறைகளையே பின்வரக் கூடியவர் அனைவரும் பின்பற்ற வேண்டும். 

இறைத் தூதர்களில் இறைவனுக்காகவே இறைவழியில் போராடித் தம் வாழ்வை அர்ப்பணித்தவர் உலுல் அஸ்ம் என்னும் தகுதியைப் பெற்றவர் ஆவார்.
     
ஒரு நாட்டுக்கு, ஒரு நகருக்கு, ஒரு சிற்றூருக்கு எனப் பல வகையில் இறைத்தூதர்கள் தோன்றியுள்ளனர். ஒரு நபியின் மகனாகத் தோன்றியவரும் உண்டு. சமகாலத்தில் வாழ்ந்தவரும் உண்டு.
     
முஹம்மது நபி (ஸல்) அவர்கள் இறை தூதர்களில் இறுதித் தூதர் ஆவார்கள். அவர்கள் நபியாகவும், ரஸூல் ஆகவும், ஊலுல் அஸ்ம் என்னும் தகுதியைப் பெற்றவர்களாகவும், ”ஃகாத்தம்” என்னும் இறுதித் தூதராகவும் இருக்கிறார்கள்.

நபிமார்க வரலாற்றுச் செய்திகளையும் முன்அறிஜவிப்புகளையும் இறைவன் தன் உயரிய வேதமாகிய திருக்குர்ஆனில் ஆங்காங்கே தேவையான அளவில் அருள் செய்துள்ளான்.

”இந்த பாக்கியத்தைப் பெறுவதற்குரிய நேர்வழியை எங்களுக்குக் காட்டிய அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும். அன்றியும் அல்லாஹ் (இந்த) நல்வழியில் எங்களை நடத்தியிருக்கவில்லையானால் நாங்கள் நேர்வழி அடைந்திருக்கவே மாட்டோம். எங்கள் ரப்பின் ரஸூல்கள் சத்திய மார்க்கத்தையே திட்டமாகக் கொண்டு வந்தார்கள்” என்று (சொர்க்கவாதிகள்) கூறுவார்கள். அப்போது இந்த சொர்க்கம் (உலகில்) நீங்கள் செய்து கொண்டிருந்த நன்மையானவற்றின் காரணமாகும்; இதன் வாரிசுகளாக நீங்கள் ஆக்கப் பட்டிருக்கிறீர்கள் என்று அவர்கள் அறிவிக்கப் படுவார்கள்”. அல்குர்ஆன்(7:43)

இறைத்தூதர்களின் தன்மைகள்:

இறையோன் தன்மைகள் சிஃபத்து மூன்றாம்
                  எவரும் அறியவே வாஜிபாகும்
குறையா அவை உண்மை உரைப்போர் எனல்
                  கொடுத்த அடைக்கலப் பொருளைப் பேணி
மறைவுறாமலே விசுவாசமாய்
                  வைக்கும் அவரெனல் கல்குகளுக்கு
அறைய அவன் சொன்ன விஷயங்களை
                  அறிவிப்பவர் எனல் ஆகமூன்றே !

பொருள்:
இறைவனின் தூதர்களுக்கு மூன்று தன்மைகள் உள்ளன.
1. எப்பொழுதும் உண்மை உரைத்தல்.
2. தம்மிடம் பாதுகாப்பாக ஒப்படைக்கப் பெற்ற பொருள்களை உரியவரிடம்
   திரும்பக் கொடுத்தல்.
3. படைப்பினங்களுக்கு இறைவன் அறிவிக்குமாறு சொன்னவற்றை
   மறைக்காமல் அறிவித்தல்.

-இம்மூன்று தன்மைகளையும் அறிவது யாவர் மீதும் கடமையாகும். 
                              -   ஃபிக்ஹு மாலை

புலவர் அஹ்மது பஷீர்.

Sunday, July 28, 2013

உ‏ண‏ர்வு தேவை

முள்நகர்ந்து மணிப்பொறியில்  நேரங் காட்டும்
       உள்ளிருக்கும் சக்கரங்கள் முள்ளை ஓட்டும்
தள்ளும்பற் சக்கரங்கள் வில்லுக் கம்பி
       சரியாக ஒவ்வொன்றும் பணியைச் செய்யும்
முள்ளைப் போல் சிலர்இருப்பார் சமுதா யத்தில்
       உள்ளிருக்கும் சக்கரம்போல் உழைப்பார் பல்லோர்
தெள்ளியனே! மணிப்பொறியை இயங்கச் செய்யத்
       திருகிவிடும் சாவியென இருப்பாய் நீயே!                                1

ழில்மிகுந்த  தொடர்வண்டி இயந்திரம் போல்
       இழுக்கவரும் சமுதாயம்! இழுப்போன் நீயே!
உழைக்கின்ற சக்கரங்கள் பெட்டி கட்கீழ்
      ருண்டிடுதல் உண்மைதான்! எல்லா ருந்தாம்
பிழைக்கின்ற வழிநோக்கி உழைக்கின் றார்கள்
       பெருந்தலைவர் பின்னாலே நடக்கின் றார்கள்
இழுக்கின்ற எந்திரம்போல் இருக்கின் றாய்நீ
       சமுதாய வண்டியினை இயங்கச் செய்வாய்!                             2

இயங்குகின்ற பொறியொன்றும் இல்லை யென்றால்
       இயக்குகின்ற எந்திரத்துக் கென்ன வேலை
இயங்குதற்குப் பலபொறிகஇள் இருந்த போதும்
       இயக்குபொறி இல்லையெனில் நிலைமை என்னாம்
பயனுள்ள மணிப்பொறிக்குச் சுழற்சி தேவை
       பணியாற்ற உறுப்புகளோ அனைத்தும் வேண்டும்
நயமுள்ள சமுதாயம் படைப்ப தற்கு
       நாடுகின்ற உனக்கிந்த உணர்வு தேவை!                                  3

கடனாற்ற வந்துவிட்ட தலைவன் கீழே
       கட்டுக்குள் அடங்குகின்ற மக்கள் தேவை!
உடன்பட்டுப் போ‏‏கின்ற சிறிய முள்ளால்
       முந்துகின்ற பெரியமுள்ளும் மதியைக் காட்டும்!
தொடுத்துவரப் பெட்டிகட்குத் தளைகள் வேண்டும்
       தொட்டிழுக்கும் எஞ்ஜினுக்கு விசைமின் வேண்டும்
அடுத்தடுத்த ஊர்களெனப் பறக்கும் காலம்
       அளப்பரிய வரலாற்றைப் படைத்துக் காட்டும்!                   4     

- புலவர் அஹ்மது பஷீர்
அவர்களின் இளைஞர்களுக்கான
முன்னேறு முன்னேறு மேலே மேலே
கவிதைத் நூலின் முதல் கவிதை