Wednesday, November 20, 2013

அல்லாஹ்வின் அழகிய திருநாமங்கள் (1)

1. யா-அல்லாஹ்
الله
2யா-ரஹ்மானு
(அளவற்ற அருளாளனே)
اَلرَّحْمنُ
3. யா-ரஹீமு
(நிகரற்ற அன்புடையோனே)
الرَّحِيْمُ
‏4யா-மலிக்கு (மன்னவனே)
اَلْمَلْكُ
5. யா-குத்தூஸு
(மிகவும் தூய்மையானவனே)
اَلْقُدُّوْسُ
6. யா-ஸலாமு
(சாந்தி அளிப்பவனே)
السلمُ
7. யா-முஃமினு
(அடைக்கலம் அளிப்பவனே)
اَلْمُؤْمِنُ
‏8யா -முஹைமினு(பாதுகாவலனே)
اَلْمُهَيْمِنُ
9. யா-அஸீஸு
(யாவற்றையும் மிகைத்தவனே)
اَلْعَزِيْزُ
10. யா-ஜப்பாரு (சமநிலையாக்குவோனே)
اَلْجَبَّارُ

 - புலவர் அஹ்மது பஷீர் அவர்களின்
புதுமலர்கள் இஸ்லாமியப் பாடநூல் 
3ஆம் வகுப்புப் புத்தகத்தில் இருந்து.


வெளியீடு 
சிங்கைப் பதிப்பகம்
சென்னை - 600087
தொலைபேசி  : 919884033731

Friday, November 8, 2013

கால் பதிக்கக் கற்றுக்கொள்

கால் பதிக்கக் கற்றுக்கொள்
வெற்றியெனும் கோட்டையின்மேல் விருப்பம் வைத்தல்
            வீணான செயலன்றே, உழைப்பில் லாமல்
வெற்றிமனக் கோட்டையினைக் கட்டிக் கட்டி
            வெட்டியிலே நேரத்தைப் போக்க லாமோ?
ற்றின்றி நூலறுந்த பட்டம் போலப்
            பதைபதைக்க வேண்டாமே! பண்பாய் எண்ணிக்
கற்றுவைத்த கல்வியெனும் தலத்தின் மீது
            காலபதிக்கக் கற்றுக்கொள்! கடுகிச் செல்க! 5

பின்னாலே கிடைக்கின்ற கனியைப் பற்றிப்
            பேராசை கொள்ளாதே! வித்தை ஊன்றி
நன்னீரைப் பாய்ச்சிவிடு! களையை நீக்கு!
            நாள்தோறும் கண்ணுக்குள் வைத்துப் போற்று
தன்னாலே மரமாகிக் கிளைக்கும், உன்றன்
            சலியாத உழைப்புக்குப் பரிசு நல்கும்
முன்னேறத் துடிக்கின்ற இளைஞ னுக்கு
            முயற்சியிலே நம்நிக்கை முதலில் வேண்டும்.   6

ண்ணமலர் மொட்டாக இருக்கும்போதே
            மணக்கின்ற குறிக்கோளை வைத்தி ருக்கும்
பண்ணமைத்து வாய்பாடும் முன்ன மேயே
            பாடுகின்ற உணர்ச்சியலை உள்ளி ருக்கும்
மண்ணுக்குள் எவ்வித்தை விதைக்கின் றாயோ
            வளர்செடிகள் அவ்வித்தின் அடையா ளந்தான்
எண்ணத்தில் கருக்கொண்ட ஆசை வித்தே
            எழில்மிகுந்த வாழ்வாகும் இயற்கை கண்டாய்!    7


நோக்கத்தைச் சீராக்கு முடிவை எண்ணி
            நோகாதே தொடங்குதற்கு முன்ன ரேயே!
வாக்கினிலே செம்மொழிகள் வைரப் பேச்சு;
            வரலாறு படைப்பதற்குத் துடிக்கும் கைகள்;
தூக்கிநிறுத் தளக்கின்ற நெடிய பார்வை;
தொடர்ந்துநடை போடுதற்குத் ‏‏துணிந்த கால்கள்;
ஆக்கத்தை எண்ணிட்டாய் இளைஞ னே!உன்
            ஆர்வத்தைத் தடைசெய்வான் இருக்கின் றானா? 8

புலவர் அஹ்மது பஷீர்
அவர்களின் இளைஞர்களுக்கான
முன்னேறு முன்னேறு மேலே மேலே
கவிதைத் நூலின் இரண்டாம் கவிதை

Saturday, August 10, 2013

இறைத்தூதர்கள் என்போர் யார்?

இறைவனுடைய செய்திகளை மக்களுக்கு அறிவித்தவர்கள் நபிமார்கள். 

அச்செய்திகள் வானவர் தலைவர் ஜிப்ரயீல் (அலை) அவர்கள் வழியாக, அல்லது நபிமார்களின் இதயத்தில் எழும் உதிப்பாக, அல்லது கனவின் மூலமாக அருளப் பெற்றன. மக்களை நல்வழி நடத்தவும், அல்வழிவிட்டு அகற்றவும் நபிமார்கள் தோன்றினர்.

இறை தூதர்களில் ரஸூல், நபி,  உலுல்அஸ்ம், ஃகாத்தம் என்னும் நான்கு தகுதிகள் - படிநிலைகள் உள்ளன.

இறைதூதர்கள் அனைவரும் நபிமார்கள் ஆவர். அவர்களின் எண்ணிக்கை 124000 என்று அறிவிக்கப் பெற்றுள்ளது. அவர்களில் வேதம் அல்லது வேதக் கட்டளைகள் கொடுக்கப்பட்டவர்கள் ரஸூல்மார்கள் எனப்பட்டனர். அவர்களுக்கெனத் தனி சட்டங்கள், வழிமுறைகள் இருந்தன. அவர்களின் எண்ணிக்கை 313. ரஸூல்களைப் பின்பற்றியவர்கள் நபியாவர். ஒரு ரஸூலின் பின் வேறு ஒரு ரஸூல் தோன்றினால்- அவருக்கெனப் புதிய சட்டங்கள் அல்லது வஷீ முறைகள் தோன்றிவிட்டால் முந்தைய ரஸூலின் ஷரீஅத் வழிமுறை முடிவுக்கு வந்துவிடும். புதிதாகத் தோன்றிய ரஸூலின் வழிமுறைகளையே பின்வரக் கூடியவர் அனைவரும் பின்பற்ற வேண்டும். 

இறைத் தூதர்களில் இறைவனுக்காகவே இறைவழியில் போராடித் தம் வாழ்வை அர்ப்பணித்தவர் உலுல் அஸ்ம் என்னும் தகுதியைப் பெற்றவர் ஆவார்.
     
ஒரு நாட்டுக்கு, ஒரு நகருக்கு, ஒரு சிற்றூருக்கு எனப் பல வகையில் இறைத்தூதர்கள் தோன்றியுள்ளனர். ஒரு நபியின் மகனாகத் தோன்றியவரும் உண்டு. சமகாலத்தில் வாழ்ந்தவரும் உண்டு.
     
முஹம்மது நபி (ஸல்) அவர்கள் இறை தூதர்களில் இறுதித் தூதர் ஆவார்கள். அவர்கள் நபியாகவும், ரஸூல் ஆகவும், ஊலுல் அஸ்ம் என்னும் தகுதியைப் பெற்றவர்களாகவும், ”ஃகாத்தம்” என்னும் இறுதித் தூதராகவும் இருக்கிறார்கள்.

நபிமார்க வரலாற்றுச் செய்திகளையும் முன்அறிஜவிப்புகளையும் இறைவன் தன் உயரிய வேதமாகிய திருக்குர்ஆனில் ஆங்காங்கே தேவையான அளவில் அருள் செய்துள்ளான்.

”இந்த பாக்கியத்தைப் பெறுவதற்குரிய நேர்வழியை எங்களுக்குக் காட்டிய அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும். அன்றியும் அல்லாஹ் (இந்த) நல்வழியில் எங்களை நடத்தியிருக்கவில்லையானால் நாங்கள் நேர்வழி அடைந்திருக்கவே மாட்டோம். எங்கள் ரப்பின் ரஸூல்கள் சத்திய மார்க்கத்தையே திட்டமாகக் கொண்டு வந்தார்கள்” என்று (சொர்க்கவாதிகள்) கூறுவார்கள். அப்போது இந்த சொர்க்கம் (உலகில்) நீங்கள் செய்து கொண்டிருந்த நன்மையானவற்றின் காரணமாகும்; இதன் வாரிசுகளாக நீங்கள் ஆக்கப் பட்டிருக்கிறீர்கள் என்று அவர்கள் அறிவிக்கப் படுவார்கள்”. அல்குர்ஆன்(7:43)

இறைத்தூதர்களின் தன்மைகள்:

இறையோன் தன்மைகள் சிஃபத்து மூன்றாம்
                  எவரும் அறியவே வாஜிபாகும்
குறையா அவை உண்மை உரைப்போர் எனல்
                  கொடுத்த அடைக்கலப் பொருளைப் பேணி
மறைவுறாமலே விசுவாசமாய்
                  வைக்கும் அவரெனல் கல்குகளுக்கு
அறைய அவன் சொன்ன விஷயங்களை
                  அறிவிப்பவர் எனல் ஆகமூன்றே !

பொருள்:
இறைவனின் தூதர்களுக்கு மூன்று தன்மைகள் உள்ளன.
1. எப்பொழுதும் உண்மை உரைத்தல்.
2. தம்மிடம் பாதுகாப்பாக ஒப்படைக்கப் பெற்ற பொருள்களை உரியவரிடம்
   திரும்பக் கொடுத்தல்.
3. படைப்பினங்களுக்கு இறைவன் அறிவிக்குமாறு சொன்னவற்றை
   மறைக்காமல் அறிவித்தல்.

-இம்மூன்று தன்மைகளையும் அறிவது யாவர் மீதும் கடமையாகும். 
                              -   ஃபிக்ஹு மாலை

புலவர் அஹ்மது பஷீர்.

Sunday, July 28, 2013

உ‏ண‏ர்வு தேவை

முள்நகர்ந்து மணிப்பொறியில்  நேரங் காட்டும்
       உள்ளிருக்கும் சக்கரங்கள் முள்ளை ஓட்டும்
தள்ளும்பற் சக்கரங்கள் வில்லுக் கம்பி
       சரியாக ஒவ்வொன்றும் பணியைச் செய்யும்
முள்ளைப் போல் சிலர்இருப்பார் சமுதா யத்தில்
       உள்ளிருக்கும் சக்கரம்போல் உழைப்பார் பல்லோர்
தெள்ளியனே! மணிப்பொறியை இயங்கச் செய்யத்
       திருகிவிடும் சாவியென இருப்பாய் நீயே!                                1

ழில்மிகுந்த  தொடர்வண்டி இயந்திரம் போல்
       இழுக்கவரும் சமுதாயம்! இழுப்போன் நீயே!
உழைக்கின்ற சக்கரங்கள் பெட்டி கட்கீழ்
      ருண்டிடுதல் உண்மைதான்! எல்லா ருந்தாம்
பிழைக்கின்ற வழிநோக்கி உழைக்கின் றார்கள்
       பெருந்தலைவர் பின்னாலே நடக்கின் றார்கள்
இழுக்கின்ற எந்திரம்போல் இருக்கின் றாய்நீ
       சமுதாய வண்டியினை இயங்கச் செய்வாய்!                             2

இயங்குகின்ற பொறியொன்றும் இல்லை யென்றால்
       இயக்குகின்ற எந்திரத்துக் கென்ன வேலை
இயங்குதற்குப் பலபொறிகஇள் இருந்த போதும்
       இயக்குபொறி இல்லையெனில் நிலைமை என்னாம்
பயனுள்ள மணிப்பொறிக்குச் சுழற்சி தேவை
       பணியாற்ற உறுப்புகளோ அனைத்தும் வேண்டும்
நயமுள்ள சமுதாயம் படைப்ப தற்கு
       நாடுகின்ற உனக்கிந்த உணர்வு தேவை!                                  3

கடனாற்ற வந்துவிட்ட தலைவன் கீழே
       கட்டுக்குள் அடங்குகின்ற மக்கள் தேவை!
உடன்பட்டுப் போ‏‏கின்ற சிறிய முள்ளால்
       முந்துகின்ற பெரியமுள்ளும் மதியைக் காட்டும்!
தொடுத்துவரப் பெட்டிகட்குத் தளைகள் வேண்டும்
       தொட்டிழுக்கும் எஞ்ஜினுக்கு விசைமின் வேண்டும்
அடுத்தடுத்த ஊர்களெனப் பறக்கும் காலம்
       அளப்பரிய வரலாற்றைப் படைத்துக் காட்டும்!                   4     

- புலவர் அஹ்மது பஷீர்
அவர்களின் இளைஞர்களுக்கான
முன்னேறு முன்னேறு மேலே மேலே
கவிதைத் நூலின் முதல் கவிதை

Sunday, August 26, 2012

தோழமையாய் உனையன்றித் துணையுண்டோ யாஅல்லாஹ்

தோழமையாய் உனையன்றித்
துணையுண்டோ யாஅல்லாஹ் 


(இக்கவிதைகள் புலவர் அஹ்மது பஷீர் அவர்களின்
மேலவனே யாஅல்லாஹ் என்ற தலைப்பில் எழுதிய
100 பாட்டுகளைக் கொண்ட கவிதைத் தொடரின்
இறுதிப் பகுதியாகும். இக்கவிதைத் தொடர் முழுமையும்
ஜூலை 2004 முதல் ஜூன் 2005 வரை
முஸ்லிம் முரசு இதழில் வெளிவந்தது.
நன்றி - முஸ்லிம் முரசு)




அருட்கொடையாய் நீயளித்தாய்
ஐந்து வகைச் செல்வங்கள்
அருட்கொடையைப் பாழடிக்க
அடியார்க்கும் ஏதுரிமை?
இருமையிலும் பயனாகி
ஈமானைக் காவலிட்டு
வரும்போதில் நற்சான்று
வழங்கிடச்செய் யாஅல்லாஹ்!

உன்னொளியைப் பாய்ச்சிட்டால்
மூர்ச்சிப்பேன் என்றோநீ
என்னெஞ்சில் மிகமெதுவாய்
உணர்வலைகள் எழுப்புகிறாய்?
மென்நடைய நன்னபியை
விண்ணகத்தில் வரவேற்றுப்
பொன்னுரைகள் புகன்றவனே
புண்ணியனே யாஅல்லாஹ்!

என்செய்வோம் எனப்பதறும்
இறுதிநிலை வருமுன்னே
உன்னுடைய கண்ணியத்தை
முன்னிறுத்தி வேண்டுகிறேன்
என்சிறுமை நோக்கிநீ
இரக்கமிகக் கொண்டாலும்
உன்பெருமை நோக்கியே
உதவிடுவாய் யாஅல்லாஹ்!

வாய்அணத்தல் மிகவாகும்
வயோதிகத்தில் முணுமுணுத்துப்
போய் என்று தொலைவானோ?"
எனஎவரும் புலம்பாமல்
தூயவனே உன்னிழலில்
தொடர்ந்தென்னைக் கரையேற்ற
நேயமுடன் உன்னிழலின்
நெருக்கந்தா யாஅல்லாஹ்!

தரையெல்லாம் கடலாக்கி
நூஹூக்குத் தெப்பமிட்டாய்
எரிதழலைக் குளிரூட்டி
இபுறாஹீம் நபிகாத்தாய்
விரிகடலைப் பிளவாக்கி
மூஸாவின் வழியமைத்தாய்
இரக்கமுடன் காத்தருள்வாய்
எனையும்நீ யாஅல்லாஹ்!

முட்டையிடும் சிறுபுறவு
ஹூஹூவென திக்ர்முழங்க
வட்டமிடும் சிலந்திஇழை
வலைபின்னித் திரையும் இட
இட்டமுடன் தவ்ர்க்குகையில்
எம்நபியைக் காத்தவனே
தட்டாமல் எனையும்கார்
தனியோனே யாஅல்லாஹ்!

முடிச்சவிழ்ந்த ஆசையெலாம்
        ஒவ்வொன்றாய்க் கைகழுவ,
வெடுக்கென்று நூலறுந்த
        பட்டம்போல் விழிசுழல,
உடனடியாய் வழியனுப்ப
        ஊர்குழும, என்நாவில்
நடுக்கமின்றிக் கலிமாவை
        நடத்தியருள் யாஅல்லாஹ்!

ஆழியலைப் பெரும்பிடியில்
அகப்பட்டோர் போல்உன்றன்
ஊழியரின் வருகையினால்
உட்கிப்போய் நிற்கையிலே
வாழுமிடம் இருந்தென்ன?
வளமைகளும் இருந்தென்ன?
தோழமையாய் உனையன்றித்
துணையுண்டோ யாஅல்லாஹ்!


பிந்தாமல் எனையடக்கப்
பிரியமுடன் வந்தவர்கள்
சந்தூக்கில் தோள்கொடுத்துச்
செந்தூக்காய்த் தூக்குகையில்
நிந்தைமொழி பகராமல்
என்னுடலை இலேசாக்கி
வந்தவரின் இறைஞ்சுதலை
வழங்கவருள் யாஅல்லாஹ்!

முளைத்தெழுந்த உயிர்க்குலங்கள்
முக்கடலாய்ச் சங்கமித்துத்
திளைத்திருந்த வாழ்வெண்ணித்
தேம்பியழும் வேளையிலே
களைத்து மயங்காமல்
கருணைநபி கைப்பற்றி
அழைத்தேக நற்கருணை
அளித்தருள்வாய் யாஅல்லாஹ்!

மடியினின்றும் கறந்திடுபால்
மறுபடியும் மடிபுகவோ?
விடியாத பொழுதுகளில்
இனியும்நான் விழித்திடவோ
படியேற்றி இறக்காத
பண்பாளா அருள்ஒளிரும்
படியேற்றி உன் நிழலில்
படியச்செய் யாஅல்லாஹ்!

எந்தவிதம் கேட்பதென
ஏதொன்றும் புரியாமல்
செந்தமிழிற் பாட்டாகச்
சிந்தையெல்லாம் கொட்டிவிட்டேன்
சொந்தமுள்ள அடியானைச்
சோதனைக்குள் ஆக்காமல்
வந்தநிலைச் சாந்தியினை
வழங்கியருள் யாஅல்லாஹ்!

Saturday, August 4, 2012

நோன்பின் சிறப்புகள்

நோன்பின் சிறப்புகள்
புலவர் பஷீர்
(இக்கட்டுரை 1992 ஆம் ஆண்டு அல்-இஸ்லாம் மாத இதழில் வெளிவந்து, பின்னர் அல்இஸ்லாம் அறிவுக் களஞ்சியம் 1992 தொகுப்பில் இடம் பெற்றது)
ஈமான் கொண்டவர்களே, உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது விதிக்கப்பட்டது போல உங்கள் மீதும் நோன்புகள் விதிக்கப்பட்டிருக்கின்றன, என்று நோன்பின் கடமையைப் பற்றி இறைவன் தனது திருமறையில் கூறியுள்ளான்.  பழங்கால முதலே எல்லா மார்க்கங்களும் ஒவ்வோர் ஆண்டும் குறிப்பிட்ட சில நாட்கள் நோன்பு நோற்பதற்குத் தம் அடியார்களுக்குப் பணித்திருந்தன.
தசையும், ஆன்மாவும் கூடிப் பிறந்த நம் உடலை வைத்தே நாம் எத்தனையோ காரியங்களை உலகில் சாதிக்க வேண்டியுள்ளது. ஆதலின், தசையையும், ஆன்மாவையும் சமமாகப் போற்றி வளர்க்க வேண்டியவர்களாக இருக்கிறோம்.   நோன்பின் அடிப்படைக் கொள்கையே இவ்விரண்டையும் சமமாகப் பாவித்துப் போற்றுவதாக உள்ளது.
உள்ளுவார்க் கெல்லாம் உள்ள விளக்களிக்கும் தெள்ளிய வேதமாகிய திருக்குர்ஆன் இந்த ரமலான் மாதத்திலேயே அருளப்பட்டது.  அவ்வேதம் முழுமையும் இம்மாதத்தில் ஓதப்பட்டு இறைவனுக்காகக் காணிக்கையாக்கப்படுகிறது.  எவரெல்லாம் இம்மாதத்தை அடைகின்றாரோ அவரெல்லாம் நோன்பு நோற்கின்றார்.  எவரேனும் நோயாளியாகவோ, பயணம் செய்பவராகவோ இருந்தால் விட்டுப்போன நோன்புகளை மற்ற நாட்களில் கணக்கிட்டு நோன்பு நோற்று முழுமைப் படுத்துகின்றார்.  இறைவன் கட்டளை மிகவும் எளிதாகவே உள்ளது.
இறைவனுக்குச் செலுத்தும் நன்றியை அளிப்பதற்குப் பசித்திருத்தல் ஒன்றே வழியன்று.  உண்மை நன்றியுடையவர்களாய் விளங்க நாம் எத்தனையோ நல்ல செயல்களைச் செய்ய வேண்டும.  இதற்காகவே நோயாளிகளுக்கும், பயணிகளுக்கும் விதி விலக்குகளும், சலுகைகளும் தரப்பட்டுள்ளன.
இறைவனின் நலனுக்காக நாம் நோன்பு நோற்கவில்லை.  நம்முடைய சொந்த நலனுக்காகேவே நோன்பு வைக்கிறோம்.
முஸ்லிம்கள் முற்றிலும் சந்திரனை அடிப்படையாக வைத்தே மாதங்களைக் கணக்கிடுகின்றனர்.  இதனால் முஸ்லிம்களின் நோன்பு மாதமாகிய ரமலான் ஓர் ஆண்டில் உள்ள எல்லாப் பருவங்களிலும் சீராக மாறி மாறி வருகிறது.  எல்லா விதப் பருவகாலங்களிலும் முறையாக மாறி மாறி வருவதால் உலக மக்கள் அனைவரும் முறையே நாம் அடைந்த இயற்கைப் பருவகாலங்களிலும் நோன்பை நோற்கின்றனர்.  நோன்புக்கான பருவங்களால் ஏற்படும் இலாப நஷ்டங்களில் யாவருக்கும் சம பங்கு கிடைக்கிறது. 
நாம் நோன்பு வைப்பதனால் இறைவனுடைய திருப் பொருத்தத்திற்கு ஆளாகிறோம்.  நோன்பு வைக்காதவர் இவ்வுலகிற் பெறும் இன்பங்களை விட் நோன்பு வைத்தவர் இறைவனிடமிருந்து பெறும் பேரின்ப வாழ்வையே பெரிதாகக் கொள்வர்.  இந்த மனப் பக்குவம் நோன்பு வைப்பதனாலேயே ஏற்படுகிறது.
நோன்புக் காலங்களில் மனிதனது உண்மையான ஆன்மா விழித்துக் கொள்கிறது.  உடலின் செழுமைக்கான உணவை ஓரளவு குறைத்தவுடன் ஆன்மாவின் ஆற்றல் மிகவும் சுறுசுறுப்புடன் பணியாற்றத் தொடங்குகிறது.
ஒவ்வொரு மனிதனிடத்தும் காணப்படும் விலங்குத் தன்மையின் அளவு குறைந்து உண்மையான மானுடத் தன்மை வெளிப்படுகிறது.
அளவிறந்து உண்பதும் உடல் இச்சை கொள்வதும் மனிதனிடத்துள்ள விலங்குத் தன்மையை அதிகப்படுத்துகின்றன.  நோன்பின் மூலம் இவ்விலங்குத் தன்மை கட்டுப்படுத்தப்படுகின்றது.  விலங்குத் தன்மையை ஊக்குவிக்கும் எல்லாத் தீமைகளையும் அகற்றும் அருமருந்தாக நோன்பு பயன்படுகின்றது.
நோன்பு நோற்பவரின் ஆன்மீக இயல்பு உள்ளொளியையும், மகிழ்ச்சியையும் அடைகின்றது.  இக்காரணங்களாலேயே நோன்பு மனிதர் மீது கடமையாக்கப் பட்டுள்ளது.
நோன்பிருப்பவர் கடைப்பிடிக்க வேண்டிய தலையாய செயல்கள் தீய பேச்சு, தீய சிந்தனை போன்றவற்றிலிருந்து தம்மை விலக்கிக் கொள்வதாகும். நோன்பின் பெயரால் பட்டினி கிடப்பதற்கும், நல்லுணர்வுடன் நோன்பிருப்பதற்கும் வேறுபாடு உண்டு.
தெய்வீகத் தன்மையுடன் நோன்பிருந்து இறைவனின் பேராற்றலை எண்ணியிருப்பதே உண்மையான நோன்பாகும்.
தொடர்ந்து உழைக்கும் எவருக்கும், எல்லாவற்றிற்கும் ஓய்வு இன்றியமையாதது.  இந்த ஓய்வு நம் ஜீரண உறுப்புகளுக்கும் தேவை.  லங்கணம் பரம ஓளடதம் என்பர் முன்னோர்.  இன்றைய மருத்துவ நூல் வல்லாரும் இம்முடிவையே கூறுவர். 
பசித்திருத்தலும், தாகத்தை அடக்கியிருத்தலும் வயிற்றிலுள்ள சுரப்பிகளிலிருந்து சுரக்கும் கொடிய அமிலங்களைச் சுரக்காது செய்கின்றன.  ஒவ்வொர் ஆண்டிலும் நோன்பு நோற்பவர் பல்வேறு உடற்பிணிகளிலிருந்தும் தம்மைத் தற்காத்துக் கொள்கிறார்.  நோன்பு நோற்பதால் இத்தகைய வெளிப்படையான அனுகூலங்கள் இருந்தாலும் முஸ்லிம்கள் இவற்றைக் கருதி நோன்பு வைப்பதில்லை.
முஸ்லிம்கள் இறைவனின் ஆணையின்படி இறைவனுக்காக அதனை ஒரு வழிபாடாகக் கருதியே நோன்பு வைக்கின்றனர்.  இதன் மூலம் இறையச்சம், இறை நம்பிக்கை, ஆன்மீக வழிப்பாடு முதலிய யாவும் உடலுக்கும் உள்ளத்துக்கும் ஒருங்கே வாய்க்கின்றன. 
இன்னமல் அஃமாலு பின்னிய்யாத்தி செயல்கள் எல்லாம் எண்ணங்களின் அடிப்படையாகவே தோன்றுகின்றன.  ஒவ்வொரு செயலைச் செய்வதற்கு முன்பும் நிய்யத் என்னும் எண்ணத்தை முன்னிறுத்தியே அச்செயல்களைத் தொடங்க வேண்டும் என்பது இஸ்லாமியக் கட்டளை.
நோன்பு நோற்பதின் முதற்பகுதியும் நிய்யத் என்னும் எண்ணமாகும்.  கதிரவன் தோன்றுவதற்கு ஒரு மணி முப்பது நிமிடங்களுக்கு முன்பிருந்து கதிரவன் மறையும் வரை உண்ணல், அருந்தல், உடலுறவு கொள்ளல் ஆகியவற்றிலிருந்து விலகியிருக்க வேண்டும்.  இந்நோன்பு இறைவனுக்காக இறைவன் கட்டளைப் படி நிறைவேற்றப்படுகிறது என்ற மனப்பூர்வமான நம்பிக்கை வேண்டும்.  மலையில் நோன்பு திறக்கும் போது இறைவா, உனக்காக நோன்பு வைத்தேன்.  உன்னிடம் நம்பிக்கை வைக்கிறேன்.  நீ அளித்த உணவைக் கொண்டு இன்றைய நோன்பைத் திறக்கிறேன்.  என்னைப் படைத்துப் காத்துக்ப் பரிபக்குவப்படுத்துபவனே, எனது நோன்பை ஏற்றுக் கொள்வாயாக, என்று பிரார்த்தனை புரிய வேண்டும்.
நோன்பிருக்கும் காலங்களில் அன்றாட வாழ்க்கைக் கடமைகளைப் புறக்கணிக்கவோ, தள்ளி வைக்கவோ இஸ்லாத்தில் இடமில்லை.  இரவு முழுவதும் விழித்திருந்து வணங்கி விட்டுப் பகல் உறக்கத்தில் சோம்பிப் படுக்க வழியில்லை. 
வழக்கமாகத் தொழுவதை விட நோன்புக் காலத்தில் அதிகமாகத் தொழுகிறோம்.  வழக்கமாக தருமம் செய்வதை விட நோன்புக் காலத்தில அதிகமாகத் தருமம் செய்கிறோம்.  அவை போன்ற வழக்கமாகச் செய்யுங் கடமைகளை விட நோன்புக் காலத்தில் அதிகமான கடமைகளை நிறைவேற்ற வேண்டியவர்களாகயிருக்கிறோம்.
இயன்றவரை இந்தப் புனித ரமலான் மாதத்தில் திருக்குர்ஆன் முழுவதையும் ஒரு தடவையேனும் ஓதிப் பூர்த்தி செய்வது நோன்பிருப்பவர்களுக்கு மிகுந்த பயன் அளிக்க வல்லது.
புனித ரமலானில் நிறைவேற்றப்பபடும் சிறப்புத் தொழுகை தராவீஹ் எனப்படும்.  ஒருவர் இந்த ரமலான் மாத இரவில் விழித்து நன்மையை நாடி உறுதி பூண்டவராய்ச் சிறப்பு வணக்கங்களை நிறைவேற்றினால் அவர் முன்னர் செய்த பாவங்களை இறைவன் மன்னிப்பான், என்று நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நவின்றுள்ளார்கள்.
இந்தத் தராவீஹ் என்றும் இரவுத் தொழுகையை நிறைவேற்றுங்கால் ரமலானில் முதல் பத்து நாட்கள் இறைவனது அருட்கொடையாகவும், இடைப் பத்து நாட்கள் பிழை பொறுத்தலையும், இறுதிப் பத்து நாட்கள் தீய நரகை விட்டுப் பாதுகாப்புத் தேடுதலையும் இறைவனிடம் மன்றாடிக் கேட்டல் வேண்டும்.
புனித ரமலானில் மிகவும் புனிதமான இரவு லைலத்துல் கத்ர் என்னும் இரவாகும்.
நிச்சயமாக நாம் அதனை லைலத்துல் கத்ரில் இறக்கி வைத்தோம்.  அது ஆயிரம் மாதங்களை விடச் சிறந்தது.  அவ்விரவன்று வானவர்களும், அர்ரூஹும் அவர்களது இரட்சகனின் கட்டளைப்படி இறங்குவர். சகல காரியத்திலும் ஈடேற்றம் தரும்  அந்த இரவு கருக்கல் உதயமாகும் காலம் வரை இருக்கும், என்று லைலத்துல் கத்ர் இரவின் சிறப்பைத் திருக்குர்ஆன் தெளிவுறுத்துகிறது.
இந்த நாளில் செய்யும் வணக்கம் மிகவும் ஏற்றமானதாக இருக்கும்.  ஆயிரம் மாதங்கள் செய்யும் வணக்கங்களை விடச் சிறப்பானதாக இருப்பதால் நல்லடியார்கள் இவ்விரவு முழுவதும் தீவிரமாயிருந்து வணங்குகின்றனர்.  இந்த இரவு புனித ரமலானின் கடைசிப் பத்து தினங்களில் ஒற்றைப்படையான நாட்களில் சம்பவிக்கின்றது எனப் பல்வேறு அறிவிப்புகள் தெரிவிக்கின்றன.
ஜக்காத் என்னும் ஏழை வரியும் சதக்கத்துல் ஃபித்ர் என்னும் தான தர்மமும் இந்நோன்புக் காலத்திலேயே நிறைவேற்றப்படுகின்றன.
உங்கள் செல்வத்தை ஜக்காத் என்னும் ஏழைவரி கொடுப்பதன் மூலம் காத்துக் கொள்க.  சதக்கா என்னும் தான தார்மம் மூலம் நோயாளிகளுக்குச் சிகிச்சை செய்யுங்கள். பணிவுடன் பிரார்த்தனை புரிவதன் மூலம் இன்னலையும், இழப்பையும் நீக்கிக் கொள்க, என்று எம்பெருமானார் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இயம்பியுள்ளார்கள்.
வெள்ளி, தங்கம், ரொக்கப் பணம், தானியம், பழவர்க்கம், வியாபாரச் சரக்குகள், ஆடு, மாடு, ஒட்டகம் முதலான யாவற்றுக்கும் ஜக்காத் என்னும் ஏழை வரி கொடுத்தல் வேண்டும்.  நூற்றுக்கு இரண்டரை விழுக்காடு முதல் செலுத்தப்படும் இந்த ஏழை வரி ஏற்றத் தாழ்வற்ற சமுதாய அமைப்பு உருவாக மிகவும் உறுதுணை செய்யும்.
ஃபித்ரா என்பது தன்னைப் பேணிக் கொள்ளும் வசதியுள்ள முஸ்லிம் ஒவ்வொருவரும், தனக்கும் தன் பாதுகாவலில் உள்ளவர்க்குமாக நபர் ஒன்றுக்கு ஒரு மரக்கால் தானியம் தர்மாகக் கொடுப்பதாகும்.  இந்த தர்மங்கள் ரமலான் மாத ஆரம்பம் தொடங்கிப் பெருநாள் தொழுகைக்கு முன்னர் கொடுக்கப்பட வேண்டும்.  பொருளற்றவரும் பெருநாளை மகிழ்ச்சியுடன் சரிசமமாகக் கொண்டாட இந்த தானதர்மங்கள் வழிவகுக்கின்றன.
புனித ரமலானுக்குப் பிறகு வரும் நாள் நோன்புப் பெருநாள் ஆகும்.  இப்பெருநாளிலும் இறைவணக்கமே இன்றி யமையாதாய்க் காணப்படுகின்றது.
புனித ரமலான் முழுவதும் நோன்பு நோற்ற பிறகு கொண்டாடப்படுவது இப்பெருநாள்.  முழுமையும் ஒரு மாதக் காலம் பகற்பொழுதில் உண்ணல், பருகல் போன்றவற்றை நீத்தவர்க்கு இத்திருநாளன்றுதான் பகற்பொழுதில் உண்ணல், பருகல் போன்ற செயல்களைச் செய்ய அனுமதி கிடைக்கின்றது.  இஃது ஒரு வகையில் இறைவன் அளித்துள்ள அருட்கொடகளுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் அமைந்துள்ளது.  சோதனைக்குப் பின்னர் வரும் வெற்றியைப் போலவும், பொறுமைக்குக் கிடைத்த பெரும் பரிசில் போலவும், இந்தப் புனிதப் பெருநாள் காட்சியளிக்கின்றது.  ஈதுல் ஃபித்ர்’- ஈகைத் திருநாள் எனப்படும் இப்புனிதப் பெருநாளை முஸ்லிம்கள் புத்தாடையணிந்தும், புதுவகை உணவு அருந்தியும், ஏழைகளுக்கு அருத்தியும் இனிதே கொண்டாடுகின்றனர்.