கால் பதிக்கக் கற்றுக்கொள்
வெற்றியெனும் கோட்டையின்மேல் விருப்பம் வைத்தல்
வீணான செயலன்றே, உழைப்பில் லாமல்
வெற்றிமனக் கோட்டையினைக் கட்டிக் கட்டி
வெட்டியிலே நேரத்தைப் போக்க லாமோ?
பற்றின்றி நூலறுந்த பட்டம் போலப்
பதைபதைக்க வேண்டாமே! பண்பாய் எண்ணிக்
கற்றுவைத்த கல்வியெனும் தலத்தின் மீது
காலபதிக்கக் கற்றுக்கொள்! கடுகிச்
செல்க! 5
பின்னாலே கிடைக்கின்ற கனியைப் பற்றிப்
பேராசை கொள்ளாதே! வித்தை ஊன்றி
நன்னீரைப் பாய்ச்சிவிடு! களையை நீக்கு!
நாள்தோறும் கண்ணுக்குள் வைத்துப் போற்று
தன்னாலே மரமாகிக் கிளைக்கும், உன்றன்
சலியாத உழைப்புக்குப் பரிசு நல்கும்
முன்னேறத் துடிக்கின்ற இளைஞ னுக்கு
முயற்சியிலே நம்நிக்கை முதலில் வேண்டும். 6
வண்ணமலர் மொட்டாக இருக்கும்போதே
மணக்கின்ற குறிக்கோளை வைத்தி ருக்கும்
பண்ணமைத்து வாய்பாடும் முன்ன மேயே
பாடுகின்ற உணர்ச்சியலை உள்ளி ருக்கும்
மண்ணுக்குள் எவ்வித்தை விதைக்கின் றாயோ
வளர்செடிகள் அவ்வித்தின் அடையா ளந்தான்
எண்ணத்தில் கருக்கொண்ட ஆசை வித்தே
எழில்மிகுந்த வாழ்வாகும் இயற்கை கண்டாய்! 7
நோக்கத்தைச் சீராக்கு முடிவை எண்ணி
நோகாதே தொடங்குதற்கு முன்ன ரேயே!
வாக்கினிலே செம்மொழிகள் வைரப் பேச்சு;
வரலாறு படைப்பதற்குத் துடிக்கும் கைகள்;
தூக்கிநிறுத் தளக்கின்ற நெடிய பார்வை;
தொடர்ந்துநடை போடுதற்குத் துணிந்த கால்கள்;
ஆக்கத்தை எண்ணிட்டாய் இளைஞ னே!உன்
ஆர்வத்தைத் தடைசெய்வான் இருக்கின்
றானா? 8
- புலவர் அஹ்மது பஷீர்
அவர்களின் இளைஞர்களுக்கான
முன்னேறு முன்னேறு மேலே மேலே
கவிதைத் நூலின் இரண்டாம் கவிதை